மன்னாரில் பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு – பொலிஸார் அடித்துக் கொலை செய்ததாக குற்றச்சாட்டு

மன்னார் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவர் இன்று வெள்ளிக்கிழமை (03) காலை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டாஸ்பத்திரி பகுதியில் நேற்று வியாழக்கிழமை (2.10) மாலை போதைப் பொருள் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததாகவும்,அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பிச் சென்றகதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பின்னர் குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார
இந்நிலையில் இன்று மாலை 6.30 அளவில் சடலம் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்ற பதில் நீதிவான் ஜெபநேசன் லோகு பேசாலை பிரதேச வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.
இதனை அடுத்து பேசாலை பொலிஸ் நிலையத்திற்கும் சென்று பொலிஸ் நிலைய சிறைக் கூடத்தையும் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்தார்.
குறித்த சந்தேக நபர் பேசாலை பொலிஸ் நிலையத்தின் முதலாம் இலக்கத் தடுப்பு காவல் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குறித்த நபரின் தாய் பேசாலை பிரதேச வைத்தியசாலைக்கு இன்று காலை (03) வருகை தந்து தனது மகனை பொலிஸார் அடித்துக் கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.