சிறப்பாக இடம்பெற்று வரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுகள்

சிறப்பாக இடம்பெற்று வரும் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுகள்

வரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்று வருகின்றJ.

இந்நிலையில், உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தி வருவதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை மாத்திரம் இன்றி உலகம் முழுவதும் இருந்து வருகை தந்த சிவ பக்தர்கள் மன்னார் பாலாவியில் நீராடி பாலாவி தீர்த்த நீரை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் உள்ள மகா சிவலிங்கத்திற்கு நீர் வார்த்து, நெய் விளக்கு ஏற்றி வேண்டுதல்கள் மற்றும் நேர்த்திக்கடனை இன்று (26) அதிகாலை தொடக்கம் செலுத்தி வருகின்றனர்.

மேலும் மகா சிவராத்திரி நிகழ்வையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாசார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.

அதே நேரம் இம்முறை சிவராத்திரி நிகழ்வுக்கு என விசேட பொலிஸ், இராணுவ அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுமார் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

Share This