ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு – தெஹ்ரானில் தாக்குதல் நடத்தவும் உத்தரவு

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
ஈரானின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தெஹ்ரானில் தாக்குதல் நடத்த இராணுவத்திற்கு உத்தரவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்மொழிவுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் தற்போது அமுலில் இருப்பதாகவும் இரு தரப்பினரும் அதை மீற வேண்டாம் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் தெற்கு நகரமான பீர்ஷெபாவில் ஈரான் இஸ்ரேல் மீது பல ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இஸ்ரேலில் நால்வர் உயிரிழந்த பின்னர் இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து எந்த உடன்பாடும் இல்லை என்றும், ஆனால் இஸ்ரேல் தனது சட்டவிரோத ஆக்கிரமிப்பை நிறுத்தினால் தெஹ்ரான் தாக்குதல்களை நிறுத்தும் என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறினார்.
அமெரிக்கா தனது அணு ஆயுத தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, திங்கட்கிழமை மாலை அமெரிக்க துருப்புக்களை வைத்திருக்கும் கத்தாரில் உள்ள ஒரு இராணுவ தளத்தின் மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது.
கடந்த 13 ஆம் திகதியன்று இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து 13 குழந்தைகள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 3,056 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
இஸ்ரேலில், ஈரானிய தாக்குதல்களால் சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சர்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.