ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள ஈரான் திட்டம்

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள, ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதற்கான அறிகுறிகளை அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற போராளிகள் ஒதுங்கி இருப்பதாகவும், ஈராக்கிய அதிகாரிகள் அவர்களின் நடவடிக்கையைத் தடுக்க முயச்சிக்கின்றனர் என்றும் அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற குழுக்கள்,அமெரிக்க தளங்களை இலக்கு வைக்க திட்டமிட்டுள்ளன என்பதை நியூயோர்க் சுட்டிக்காட்டாத போதிலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் பல வருட தாக்குதல்களால் ஈரானின் பினாமி வலையமைப்பு பலவீனமடைந்துள்ளதாகவும் கடந்த மூன்று ஆண்டுகால இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் பல பெரிய இழப்புகளைச் சந்தித்த தெஹ்ரானின் லெபனானை தளமாகக் கொண்ட பினாமி, யூத அரசுக்கு எதிரான அண்மைய போராட்டத்தில் இணையப் போவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானின் பினாமி வலையமைப்பு
ஈரான், தனது நேரடி படைகளை பயன்படுத்தாமல், பினாமி ஆயுதக்குழுக்கள் (proxy groups) மூலம் பல நாடுகளில் தாக்குதல்களை மேற்கொள்கிறது. இதுவே ஈரானின் பினாமி வலையமைப்பாகும். முக்கியமாக,
-
ஹெஸ்பொல்லாஹ் (லெபனானில்)
-
ஹூதி (யேமனில்)
-
ஷியா ஆயுதக்குழுக்கள் (ஈராக் மற்றும் சிரியாவில்)
-
ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் (பலஸ்தீனில்)
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள்
கடந்த பதினைந்து ஆண்டுகளாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானின் அணு திட்டங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் பினாமி குழுக்களின் தளங்களை, மற்றும் முகாம்களை சிரியா, ஈராக், லெபனான், யெமன் போன்ற நாடுகளில் தாக்கியுள்ளனர். குறிப்பாக, இஸ்ரேல், சிரியா மற்றும் லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவாளர்களை இலக்கு வைத்துள்ளது.
தொடர்ந்து இடம்பெறும் விமானத் தாக்குதல்கள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் சர்வதேச தடைகள் காரணமாக பினாமி குழுக்களின் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன, முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர், பொருளாதார ஆதாரம் மற்றும் ஆயுத உற்பத்தி குறைந்துள்ளது.
எனினும், பூரணமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று கூற முடியாது. ஹெஸ்பொல்லா போன்ற சில குழுக்கள் மிகவும் பலம் மிக்கவை.
தெஹ்ரானின் லெபனான் தளமான ஹெஸ்பொல்லா தற்போது முழுமையான போரில் இஸ்ரேலுக்கு எதிராக இணையவில்லை என்பதுடன் அவர்கள் தற்போது தெளிவான கட்டுப்பாடுகளுடன், ஒரு மிதமான பதிலடி அளிக்கும் போக்கைதான் பின்பற்றுகிறார்கள்.
பாலகணேஷ் டிலுக்ஷா