வீதி விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

வீதி விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

எதிர்காலத்தில், குடிபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால், போக்குவரத்துச் சட்டத்திற்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே. சேனாதிர தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வீதி விபத்துக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் மற்றும் மது அருந்துதல் தான் என்று சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை போக்குவரத்து சட்டத்திற்கு கூடுதலாக குற்றவியல் சட்டத்தின் கீழ் கையாள பொலிஸ்மா அதிபர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது.

குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர். வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும்.

அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது.

ஆகவே, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்” என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )