உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 167 கத்தோலிக்கர்கள் “விசுவாசத்தின் சாட்சியாளர்களாக” அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 167 கத்தோலிக்கர்கள் “விசுவாசத்தின் சாட்சியாளர்களாக” அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் ‘விசுவாசத்தின் சாட்சியாளர்கள்’ எனும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், விசுவாசத்தின் சாட்சியாளர்கள் எனும் பட்டியலில் உத்தியோகபூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் ஆறாவது வருட நினைவுதினத்தையிட்டு இன்று (21) கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

திருத்தந்தையின் திருப்பீடமான வத்திக்கானில் இயங்கும் இறைமக்களை தூயவர்களாக வழிகாட்டும் திருத்துறை நம்பிக்கையின் சாட்சிகள் அடங்கிய அகராதியில் பெயர்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான பிரகடனத்தை வாசித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதனிடையே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்ற நூலகத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதை பொதுமக்களுக்கு வெளியிடுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நீதிபதி ஜனகத சில்வா தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கை, தற்போது நாடாளுமன்ற நூலகத்தில் மட்டுமே கிடைக்கிறது, விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்றார்.

இந்த புனித விழாவிற்கு பேராயர் தலைமை தாங்கியதோடு, மதகுருமார்கள், அருட்தந்தைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நினைவுகூர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

 

Share This