நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்ட நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அரசு தரப்பு சார்பாக முன்னிலையான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கு தொடர்பாக பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களைத் தாண்டி பிரதிவாதி பல ஆவணங்களைக் கோரியுள்ளதாகக் கூறினார்.
அந்த ஆவணங்களை வழங்க காலவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இந்த வழக்கின் முதல் சாட்சியின் முழுமையான வாக்குமூலம் தேவை என்றும் பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
அதன்படி, பிரதிவாதிகள் கோரிய ஆவணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.