கெஹெலியவுக்கு பிணை

தரமற்ற தடுப்பூசி கொள்வனவின் ஊடாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
ஒவ்வொரு பிரதிவாதியும் தலா 05 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 05 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதிமன்றம், அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
பிரதிவாதிகளுக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பதை சட்டமா அதிபர் எதிர்ப்பதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் பின்னர், பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்கக் கோரி அவர்களின் சட்டத்தரணிகள் நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களைப் பரிசீலித்த நீதிபதிகள் மகேஷ் வீரமன், பிரதீப் அபேரத்ன மற்றும் அமலி ரணவீர ஆகியோரை உள்ளடக்கிய மேல் நீதிமன்ற அமர்வு,
சட்டமா அதிபரின் கோரிக்கையை நிராகரித்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது.