மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்

நாட்டில் தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 3,147 பேருக்கான நியமனக் கடிதங்கள் நாளை சனிக்கிழமை (24) வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அலரி மாளிகை வளாகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நாளை காலை 9.30 இற்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றும்
அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதன்போது தாதியர் சேவையில் சிறப்பு தரத்தில் உள்ள 79 அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.