மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

நாட்டின் பல கடற்பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோர பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பிராந்தியங்களில் அவ்வப்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60km முதல் 70km வரை அதிகரித்து காணப்படலாம் என திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் ஏனைய கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மிற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.