
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கு – நீதிமன்ற அறிவிப்பு
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு தொடர்பான லஞ்ச ஊழல் வழக்கில் பெயரிடப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் புதல்வரும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினருமான ஷமிந்திர ராஜபக்ச மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி ஆகியோரே இந்த வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆராய்ந்த கொழும்பு தலைமை நீதவான் அஸங்க போதராகம, இந்த உத்தரவை ஏப்ரல் 02 ஆம் திகதி வழங்குவதாகத் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பேசப்பட்ட இந்த ஏர்பஸ் விமானக் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள் தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
