
மொரட்டுவையில் சவப்பெட்டியைத் தோண்டி நகைகளைத் திருட முயன்ற மயான ஊழியர் கைது
மொரட்டுவை, ராவத்தாவத்தை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டிருந்த பெண்ணொருவரின் உடலிலிருந்த நகைகளைத் திருடும் நோக்கில், சவப்பெட்டியைத் தோண்டிய மயான ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி காலமான 73 வயதுடைய பெண்ணொருவரின் புதைகுழியை, மதுபோதையில் இருந்த மூவர் கடந்த 22ஆம் திகதி தோண்டியுள்ளனர்.
இதன்போது, தனது தாய்க்கு அஞ்சலி செலுத்துவதற்காக மயானத்திற்குச் சென்ற உயிரிழந்த பெண்ணின் மகள், இந்தத் திருட்டு முயற்சியைக் கண்டு சத்தமிட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த மூவரும் தப்பியோடிய நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய வாக்குமூலத்தின்படி, உடலிலிருந்த நகைகளைத் திருடும் நோக்கிலேயே புதைகுழியைத் தோண்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், அந்த உடலிலிருந்த நகைகள் அனைத்தும் ‘இமிட்டேஷன்’ ரகப் போலியான நகைகள் என உயிரிழந்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய ஏனைய இருவரைத் தேடிவரும் பொலிஸார் , விலை உயர்ந்த சவப்பெட்டியைத் திருடும் நோக்கம் ஏதும் இருந்ததா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
