
அதிகாரத்தின் நிர்வாணக் கோலம்: எப்ஸ்டீன் சிஸ்டம் – ஒரு சிறப்புப் பார்வை
பணம் இருந்தால் எதையும் வாங்கலாம், அதிகாரம் இருந்தால் எப்பேர்ப்பட்ட குற்றத்தையும் மறைக்கலாம் என்று நினைக்கும் ஒரு கும்பலின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவணங்கள் தான் இன்றைய உலகையே அதிரச் செய்து கொண்டிருக்கும் “எப்ஸ்டீன் கோப்புகள்”.
ஒரு சாதாரணக் கணித ஆசிரியராகத் தொடங்கி, உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள், பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் அரச வம்சத்தினரைத் தனது விரல் நுனியில் ஆட்டிப்படைத்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் மர்ம மனிதனின் பின்னணி என்ன?
பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களைப் பறிக்க வைத்தது முதல், அமெரிக்காவின் முன்னாள், இன்னாள் அதிபர்கள் வரை பலரது பெயர்களைப் பதற வைத்துக் கொண்டிருக்கும் அந்த 30 லட்சம் பக்கங்கள் சொல்லும் ரகசியங்கள் என்ன? சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திப் பிஞ்சுயிர்களைச் சிதைத்த அந்தப் ‘பீடோபைல் தீவு’ (Pedophile Island) கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்கள் செய்த அநீதிகளையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது ஆதவன் செய்திப் பிரிவின் இந்தச் சிறப்புப் பதிவு
தவறு யார் செய்தாலும் தண்டிக்கும் பிரித்தானியா! நூற்றாண்டு காலப் பாரம்பரியமும், கண்ணியமும் கொண்ட பிரித்தானிய அரச குடும்பத்தில், ஒரு தனி நபர் செய்த தவறால் இன்று அந்தப் பெயருக்கே ஒரு கறை படிந்திருக்கிறது! அந்த வம்சத்தின் ஒரு வாரிசு, ஒரு தகாத ஒருவரோடு நட்பு வைத்ததால், இன்று அந்தப் பரம்பரையின் கௌரவமான பொறுப்புகளில் இருந்தே அவர் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இதற்கு ஒரே ஒரு பெயர்தான் காரணம்… அது ஜெஃப்ரி எப்ஸ்டீன் எனும் சர்ச்சைக்குரிய நபர்!
டிசம்பர் 2010-ல், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில் இந்த கொடூரன் எப்ஸ்டீனுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி உலகையே அதிர வைத்தது. 2019-ல் பிபிசி நேர்காணலில், ‘அந்த நட்பை முறிக்கத்தான் நான் அங்கு சென்றேன்’ என்று ஆண்ட்ரூ தெரிவித்த போதிலும், 2011-ன் ரகசிய மின்னஞ்சல்கள் அவர் சொன்னது பொய் என்பதை நிரூபித்தன!
விளைவு? தவறு செய்தவர் இளவரசராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்தது! 2025-ல் ஆண்ட்ரூவின் அரச பட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டன. நூற்றாண்டு காலப் பாரம்பரியம் கொண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் கிரீடத்தையே குழிதோண்டிப் புதைத்தது இந்த எப்ஸ்டீன் சிஸ்டம்!”
ஆசிரியர் முதல் கோடீஸ்வரன் வரை: அந்த மர்ம வளர்ச்சி
“இன்று நாம் பார்க்கப்போவது ஒரு தனிமனிதனைப் பற்றிய கதையல்ல… அதிகாரத்தின் இருண்ட பக்கம், செல்வம் இருந்தால் எதையும் மறைக்கலாம் என்று நினைத்தவர்களின் முகமூடியைக் கிழித்தெறிந்த ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ பற்றிய ஒரு அலசல்!
1970-களில் ஒரு சாதாரணக் கணித ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய எப்ஸ்டீன், தனது தந்திரத்தால் வால் ஸ்ட்ரீட் வங்கியாளர்களை வளைத்துப் போட்டார். ஒரு மாணவனின் தந்தை மூலம் ‘பியர் ஸ்டியர்ன்ஸ்’ வங்கிக்குள் நுழைந்த எப்ஸ்டீன், நான்கே ஆண்டுகளில் பங்குதாரராக உயர்ந்தான்! 1982-ல் தனது சொந்த நிறுவனத்தைத் தொடங்கி, 1 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கும் அளவுக்கு வளர்ந்தார். அதன் பிறகு அவர் சேர்த்த செல்வம், அவனது காமவெறிக்கும் அதிகார ஆட்டத்திற்கும் எரிபொருளானது!
30 லட்சம் பக்கங்கள்… நடுங்கும் உலகத் தலைவர்கள்!
“ஜனவரி 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த ஆவணங்கள் உலகையே உலுக்கி வருகின்றன. சுமார் 30 லட்சம் பக்கங்கள், 2,000 வீடியோக்கள், 1.8 லட்சம் படங்கள்! இதில் பில் கிளிண்டன் முதல் டொனால்ட் டிரம்ப் வரை, பில் கேட்ஸ் முதல் எலான் மஸ்க் வரை எனப் பெரும் புள்ளிகளின் பெயர்கள் அடிபடுகின்றன.
எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் டிரம்ப் பெயர் இருப்பதைப் பதிவிட்டு விட்டு பின் அதை நீக்கியது பெரும் சர்ச்சையானது. 2002-லேயே டிரம்ப், ‘ஜெப் ஒரு அருமையான மனிதர், என்னைப் போலவே அவருக்கும் இளம் பெண்களைப் பிடிக்கும்’ என்று புகழ்ந்து தள்ளினார். ஆனால், விவகாரம் முற்றியவுடன், ‘அவர் என் கிளப் பெண்களிடம் தவறாக நடந்ததால் விரட்டிவிட்டேன்’ என்று மாற்றி பேசினார். இதற்கிடையே, இந்தியப் பிரதமர் மோடி, அம்பானி போன்றோரின் பெயர்களும் மின்னஞ்சல்களில் இடம்பெற்றுள்ளதாகக் கசிந்த செய்தியை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. எது எப்படியோ, இந்த ஆவணங்கள் அதிகார வர்க்கத்தின் உறக்கத்தைக் கலைத்துள்ளன என்பதுதான் நிதர்சனம்!”
இதனிடையே, ‘இலங்கை’ என்ற பெயர் 188 இடங்களில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
அதிகாரத்தின் பலமும்… ‘வசதியான’ சிறைவாசமும்
“2003-லேயே பத்திரிகையாளர் விக்கி வார்டு இவனது மர்மங்களைக் கண்டுபிடித்தார். 1996-ல் மரியா ஃபார்மர் என்ற பெண்ணும் அவரது 14 வயது தங்கையும் பாதிக்கப்பட்டதை வெளிப்படுத்த முயன்றார். ஆனால், எப்ஸ்டீன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் செய்தியையே நசுக்கியுள்ளார்!
2005-ல் 14 வயது சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 50-க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்தும், ‘நூற்றாண்டின் மிகப்பெரிய ரகசிய ஒப்பந்தம்’ மூலம் இவருக்கு வெறும் 13 மாதங்கள் மட்டும் சிறைத் தண்டனை கிடைத்தது. அதுவும் எப்படி? வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தனது அலுவலகத்திற்குச் சென்று வர ‘பணி நிமித்தமான விடுப்பு’ வழங்கப்பட்டது! இதுதான் அதிகாரத்தின் பலம்! இதுதான் அநீதியின் உச்சம்
மர்மமான மரணம்: தற்கொலையா? கொலையா?
“பாதிக்கப்பட்ட வர்ஜீனியா ஜூஃப்ரேயின் நீண்ட சட்டப் போராட்டத்தால், நீதிபதி லோரெட்டா பிரெஸ்கா இந்த ரகசியங்களை வெளியிட உத்தரவிட்டார். ஆனால், 2019-ல் மீண்டும் கைதான எப்ஸ்டீன், உண்மைகளைச் சொல்லப்போகும் நேரத்தில் மர்மமாக இறந்து கிடந்தார்.
கேமராக்கள் திடீரென வேலை செய்யவில்லை!
காவலர்கள் தூங்கிவிட்டார்கள்! இது தற்கொலையா? இல்லை உண்மைகளைத் மறைக்க பெரிய இடத்து ஆட்கள் செய்த கொலையா? இன்றும் மர்மம் நீடிக்கிறது. அதனால்தான், இந்த வழக்கின் விசாரணையும் ஆதாரங்களும் இப்போது வெளிப்படையாக வெளியிடப்பட்டு வருகின்றன!”
கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல்: கொடுரனின் ஏஜென்ட்!
“இந்தக் காமப் கொடுரனின் வலது கையாக இருந்தவள் அவனது காதலி கிஸ்லேன் மேக்ஸ்வெல். உலகத் தலைவர்களையும் கோடீஸ்வரர்களையும் எப்ஸ்டீனுக்கு அறிமுகப்படுத்தியது இவர்தான். சிறுமிகளைப் பாலியல் சுரண்டலுக்காகக் கடத்திய குற்றத்திற்காக இன்று இவர் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். 17 வயதில் இளவரசர் ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய வர்ஜீனியா ஜூஃப்ரேயுடன், ஆண்ட்ரூ பல மில்லியன் டாலர்கள் கொடுத்து சமரசம் செய்து கொண்டது எதை உணர்த்துகிறது?
இறுதி எச்சரிக்கை: சிஸ்டம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது!
இவர்களெல்லாம் அந்த ‘பீடோபைல் தீவுக்கு’ (Pedophile Island) ஏன் சென்றார்கள்? அங்கு நடந்த அசிங்கங்களில் இவர்களுக்குப் பங்கு என்ன? அதிகாரம் என்பது ஏழை மக்களைக் காக்கவா? அல்லது இதுபோல பிஞ்சுயிர்களைச் சிதைக்கும் காமவெறிக்குக் கேடயமாக இருக்கவா?
எப்ஸ்டீன் செத்துவிட்டார். ஆனால் அவர் உருவாக்கிய அந்த ‘எப்ஸ்டீன் சிஸ்டம்’ இன்றும் உயிரோடுதான் இருக்கிறது. அதிகாரமும் பணமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற அந்தத் தைரியத்தை இந்த சிஸ்டம் இன்னும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
இது ஏதோ அமெரிக்காவில் நடந்த கதை என்று கடந்து போகாதீர்கள். நமது சமூகத்திலும் அதிகார மிரட்டலுக்குப் பயந்து எத்தனை பிஞ்சுயிர்கள் மௌனமாக அழுகின்றனவோ? ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ வெறும் காகிதங்கள் அல்ல; அவை அதிகார வர்க்கத்தின் முகத்தில் பூசப்பட்ட கரி! நீதியைத் தற்காலிகமாகப் புதைக்கலாம், ஆனால் அது ஒருநாள் எரிமலையாக வெடிக்கும் என்பதற்கு எப்ஸ்டீன் கோப்புகளே சாட்சி!
எப்ஸ்டீன் செத்துட்டார்… ஆனா எப்ஸ்டீன் சிஸ்டம் இன்னும் உயிரோட இருக்கு. அதை வேரோடு அழிக்க நாம் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!”
– D. Rasmila
