
இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
மோட்டார் சைக்கிளின் சமிக்ஞை விளக்குகள் (Signal Lights) செயலிழந்திருந்தமை தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை, சட்ட நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் ஒப்படைப்பதற்காக 3,200 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்துப் பிரிவின் பதில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றும் இவரே, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
எத்தால பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 19ஆம் திகதி குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பொலிஸார் பொறுப்பேற்றிருந்தனர்.
அதனை மீண்டும் வழங்குவதற்காகச் சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் முதலில் 2,200 ரூபாவை இலஞ்சமாகக் கோரியதுடன், நேற்று மேலதிகமாக 1,000 ரூபாவைச் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் பிரதான வாயிலுக்கு அருகே வைத்துப் பெற முயன்றபோது கையும் மெய்யுமாகக் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
