மகளுடன் பிறந்த நாளை கொண்டாட இலங்கைக்கு வந்த பிரித்தானிய பிரஜை மர்ம மரணம்

மகளின் 34வது பிறந்தநாளை இலங்கையின் மலைநாட்டு பிரதேசத்தில் கொண்டாடுவதற்காக மகளுடன் இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை எல்ல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியத்தின் (United Kingdom) ஒக்பாத் (Oakpath) பகுதியைச் சேர்ந்த 63 வயதான பிறிற் மெல்லென்ற் (Brett Maclean) என்பவரே உயிரிழந்தவர், தனது மகள் நற்றாலி ஆன் (Natalie Anne) உடன் ஒக்டோபர் 16ஆம் திகதி இலங்கைக்கு இவர் வந்துள்ளார்.
மகளின் 34 ஆவது பிறந்த நாளை கொண்ட இவர் இலங்கைக்கு வந்தாக பொலிஸார் கூறுகின்றனர்.
சென்ற ஒக்டோபர் 23ஆம் திகதி எல்லக்குச் செல்வதற்கு முன்னர் இருவரும் முதலில் மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிகமவிற்கு விஜயம் செய்ததாகவும், அங்கு உள்ளூர் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சென்ற 25 ஆம் திகதி சனிக்கிழமை தந்தையும் மகளும் எல்லப்பாறையில் நடைபயணத்திற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மக்லீன் மலை உச்சியில் திடீரென சரிந்து விழுந்ததாகவும், பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, பண்டாரவளை நீதவான் கெமுனு சந்திரசேகர நீதவான் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், விசேட நீதி வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
