முக்கிய தபால் நிலையங்கள் சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்படும்

இலங்கையின் முக்கிய நகரங்களில் உள்ள தபால் நிலையங்களை சுற்றுலா தலங்களாக மாற்றுவதற்காக, அஞ்சல் திணைக்களத்தின் கீழ் புதிய திட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
நுவரெலியா, கண்டி, கொழும்பு மற்றும் காலி ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதான தபால் தலைமையகத்திற்கு அருகில் ஒரு அருங்காட்சியகத்தை நிறுவுவதற்கான திட்டங்களும் நடைபெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அஞ்சல் துறையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.