காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?

மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில் ஏற்படும் தாமதங்களே விலகுவதற்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் இந்திய குழுக்களுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் இறுதி முடிவு தாமதமாவதால்,மரியாதையுடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி குழுமம் இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அவரது குழுவினரும் அதானி திட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

அந்த குழுமம் மீது அமெரிக்காவில் பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதானி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும், அதன் பிறகு மேலும் முடிவெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியிருந்தது.எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் இதுவரை இறுதி பதிலளிக்கவில்லை.

Share This