எரிபொருள் சர்ச்சையால் மக்கள்  நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் – சஜித்

எரிபொருள் சர்ச்சையால் மக்கள்  நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர் – சஜித்

எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தோடு ஏற்பட்ட நெருக்கடியால் நாட்டு மக்கள்  நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம், மதவச்சி, புல்எலிய, திபுல்வெவ வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல புராதன விகாரையின் விகாராதிபதி ஷப்த விஷாரத கச்சாயன வம்ஷாலங்கார சாசன கீர்த்தி ஸ்ரீ பிலியந்தல சுபோத தேரரின் ஆலோசனையின் பிரகாரம் அவ்விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட சரோஷிக செனவிரத்ன ஞாபகார்த்த சைத்திய, மகா சங்கத்தினரின் சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கும் புண்ணிய நிகழ்வில் இன்றைய தினம் (01) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை எவ்வித கலந்துரையாடலும் இன்றி தற்போதைய அரசாங்கம் திடீரென நிராகரித்துள்ளமையால்,தற்போது பெரும் எரிபொருள் வரிசை உருவெடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தாலும், நாட்டை ஆள முடியா நிர்வாக திறனின்மையாலும் ஏற்பட்ட நெருக்கடியே இதுவாகும். பெருமளவிலான ஊழியர்கள் வேலையிழந்து, பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட நாட்டிற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே,இந்த நெருக்கடிக்கு உடனடி தீர்வு
காணப்பட வேண்டும். இதனால் அழுத்தத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியோ, பிரதமரோ,அல்லது அமைச்சர்களோ அல்ல, சாதாரண மக்களே இதற்கு முகம் கொடுக்கின்றனர். எனவே, எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இந்த எரிபொருள் பிரச்சினையில் இருந்து அரசாங்கமோ, ஜனாதிபதியோ தப்ப முடியாது. தப்பிக்கும் அரசியலையும், நழுவும் அரசியலையும் தவிர்க்குமாறும், பொய் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகள் வழங்க வேண்டும்.

நாடு முகம் கொடுத்துள்ள எரிபொருள் பிரச்சினையை தீர்த்து, உடனடியாக எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன் என எதிர்க்கட்சி தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

 

Share This