ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என நம்புவதாக சிறிநேசன் தெரிவிப்பு

ஊடகவியலாளர்களின் கொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என நம்புவதாக சிறிநேசன் தெரிவிப்பு

ஊடகவியலாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தாங்கள் நம்புவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் அமரர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (31) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் மட்டு. ஊடக அமையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், வடகிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் அமரர் நடேசனின் உருவப்படத்திற்கு சிரேஷ்ட ஊடகவியலாளர்களான நடராசா மற்றும் பெடிகமகே ஆகியோரினால் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து முதல் சுடரை மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் ஏற்றிவைத்தார்.

பின்னர் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மற்றும் கிழக்கு தெற்கிலிருந்தும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

Share This