
அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை
இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பானது 2019ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்த 7 ஆண்டு காலக்கட்டத்தில், தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட ஆறு விளையாட்டுத்துறை அமைச்சர்கள் பதவி வகித்துள்ள போதிலும், அதிகாரிகளுக்கு இடையே நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போட்டிகள் காரணமாக இந்தக் குழப்பநிலைக்கு இதுவரை எவராலும் தீர்வைக் காண முடியவில்லை.
இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்திற்கான (2024 – 26) தேர்தலை கடந்த 2024 ஜூலை 25 அன்று நடத்துவதற்கு இறுதியாக எடுக்கப்பட்ட முயற்சியும், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக தோல்வியில் முடிவடைந்தது.
இதனால் தற்போது இலங்கையின் சைக்கிளோட்ட நிர்வாக விவகாரங்கள் அனைத்தும் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவரது அனுமதியுடன் சில உள்நாட்டு சைக்கிளோட்டப் போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வந்தாலும், சர்வதேசப் போட்டிகளில் இலங்கை பங்கேற்பதற்கான வாய்ப்புகள் முற்றிலும் அற்றுப்போயுள்ளன.
இலங்கை தேசிய சைக்கிளோட்ட அணி கடைசியாக 2019 டிசம்பரில் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் (SAG Games), அதே ஆண்டில் நடைபெற்ற ஆசிய சம்பியன்ஷிப் தொடரிலும் பங்கேற்றிருந்தது.
அந்த காத்மாண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் நான்கு வெண்கலப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிர்வாகக் குழப்பங்களின் பின்னணி 2022 மே 29 அன்று நடைபெற்ற தேர்தலுடன் தீவிரமடைந்தது.
அப்போது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அமல் ஹர்ஷ டி சில்வா, அதே ஆண்டு ஜூலை மாதம் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதால் தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அதன் பின்னர் சம்மேளனம் சுமார் ஏழு மாதங்கள் தலைவரின்றியே இயங்கியது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களால் 2024 ஜூலையில் நடத்தவிருந்த தேர்தலும் நீதிமன்ற உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டது.
குறிப்பிடத்தக்க அம்சமாக, உள்நாட்டில் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும், சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் (UCI) இன்னமும் 2018-19 காலப்பகுதியில் தலைவராக இருந்த சர்வதேச நடுவர் என். கருணாரத்ன உள்ளிட்ட செயற்குழுவையே இலங்கையின் உத்தியோகபூர்வ நிர்வாகமாக இன்றுவரை அங்கீகரித்துள்ளது.
முன்னதாக, தங்களது பதவிக்காலத்தில் தணிக்கை அறிக்கைகளை (Audit Reports) சமர்ப்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் என். கருணாரத்ன, செயலாளர் நிஹால் குலசேகர மற்றும் பொருளாளர் சேனக ரணசிங்க ஆகியோருக்கு விளையாட்டுத்துறை அமைச்சு நீண்டகாலத் தடை விதித்திருந்தது. எனினும், தற்போதைய அமைச்சர் சுனில் குமார கமகே பதவியேற்றதும் அத்தடையை நீக்கினார். அதேவேளை, சம்மேளனத்தின் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இவர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இவ்வாறான சூழலில், இலங்கையின் தற்போதைய நிர்வாக நெருக்கடி குறித்து அறிவித்துள்ள சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனம் (UCI), இலங்கையானது சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் பங்கேற்க வேண்டுமாயின், அது சர்வதேச நடுவர் என். கருணாரத்னவின் நேரடி மேற்பார்வையின் கீழ் மட்டுமே சாத்தியமாகும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
