FIA Formula 3 இல் பங்கேற்கும் முதல் இலங்கையர் யுவன் டேவிட்

18 வயதுடைய இலங்கை போர்மியுலா 3 பந்தய வீரர் யுவன் டேவிட், 2026 FIA Formula 3 சீசனில் பங்கேற்கும் முதல் இலங்கையர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.
யுவன் டேவிட் AIX ரேசிங் அணியுடன் 2026 சீசனுக்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது யூரோஃபார்முலா ஓபன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் யுவன், இந்த சீசனில் நான்கு பந்தய வெற்றிகளையும், மேலும் ஐந்து போடியம் இடங்களையும் பெற்று, தற்போது புள்ளிகள் தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளார்.
2024ஆம் ஆண்டு F4 ஸ்பானிஷ் மற்றும் UAE F4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று, ஒற்றை இருக்கை பந்தயத்தில் தனது முதல் முழு சீசனை நிறைவு செய்த இவர், கார்ட்டிங்கிலிருந்து பந்தயக் கார்களுக்கு மாறிய பின்னர் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
யுவன் தனது ஒப்பந்தம் குறித்து கூறுகையில், “இலங்கையின் முதல் வீரராக FIA Formula 3 இல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன். AIX ரேசிங்குடன் இணைந்து பெரிய மைல்கற்களை எட்டுவதற்கு ஆவலாக உள்ளேன்,” என்றார்.
2024ஆம் ஆண்டு மொன்ஸாவில் யூரோஃபார்முலா ஓபன் பந்தயத்தில் இரு வெற்றிகளைப் பெற்று, இலங்கையின் தேசியக் கொடியை பறக்கவிட்ட யுவன், FIA மோட்டார்ஸ்போர்ட் கேம்ஸில் 2022இல் கார்ட்டிங் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவரது இந்தப் பயணம், இலங்கை மோட்டார்ஸ்போர்ட்டை உலக அரங்கில் பிரகாசிக்க வைத்துள்ளது.
AIX ரேசிங், 2026 சீசனுக்கான முதல் FIA F3 ஒப்பந்த வீரராக யுவனை அறிவித்துள்ளது. இவரது திறமையும், வேகமும், தொழில்முறை அணுகுமுறையும் அணியின் எதிர்பார்ப்புகளை உயர்த்தியுள்ளன.