பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் – மேலும் இரு மாணவர்கள் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே எட்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அதில் நான்கு மாணவர்கள் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் , கடந்த 29 ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.
மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாக குறித்த மாணவன் கடிதம் எழுதியுள்ளதுடன் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளநிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.