
இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இரு தலைவர்கள்
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரைத் தங்களது இலக்குப் பட்டியலில் (Hit List) இருந்து இஸ்ரேல் நீக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அமெரிக்கா வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் இஸ்ரேல் இந்த முடிவை எடுத்துள்ளது.
இவ்விரு தலைவர்களின் இருப்பிடங்கள் குறித்த துல்லியமான தகவல்கள் இஸ்ரேலிடம் இருந்தபோதிலும், அவர்களைக் கொன்றால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரானில் வேறு எவரும் இருக்கமாட்டார்கள் என்றும், அது போர்ச் சூழலை மேலும் சிக்கலாக்கும் என்றும் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் வாதிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தற்காலிகமாக இந்தத் தாக்குதல் திட்டத்தைக் கைவிட்டுள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் மோதலைத் தணிக்க பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுப்பிய 15 அம்ச அமைதித் திட்டத்தைப் பாகிஸ்தான் வழியாகவே ஈரான் பெற்றுள்ளது.
இந்தப் போர்ச் சூழலில் பல நாடுகள் ஈரானுடனான தொடர்பைத் துண்டித்துள்ள நிலையில், பாகிஸ்தான் மட்டுமே இரு நாடுகளுடனும் நேரடித் தொடர்பில் உள்ளது.
எனவே, எதிர்காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றால், அதற்குப் பாகிஸ்தான் ஒரு முக்கிய தளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
