தமிழ்நாடு போராடும்…வெல்லும் – முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது எக்ஸ் தளத்தில் வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,“பொதுவாக நான் எனது பிறந்தநாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவதில்லை. ஆனால், திமுக அரசின் சாதனைகள், கொள்கைப் பரப்பல் போன்றவற்றுக்காக கூட்டம் நடத்துவார்கள்.
ஆனால், இந்த பிறந்தநாளில் நான் ஒரு கோரிக்கை முன்வைக்கிறேன். தற்போது தமிழ்நாட்டில் மொழிப் பிரச்சினையும் தொகுதி மறுசீரமைப்பும் பெரும் பிரச்சினையாக உள்ளது.
எனவே ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் நமது நிதியும் இன்னும் வழங்கப்படவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள். நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்.
இவ்வாறு நடந்தால் அதனை ஒருபோதும் தமிழ்நாடும், தி.மு.கவும் ஏற்காது.
தமிழ்நாட்டுக்காக ஒன்றுபட்டு போராடும்…தமிழ்நாடும் போராடும்…தமிழ்நாடு வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.