
சுரேஷ் சாலேவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று (25) கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
நேற்று (25) காலை பேலியகொட மீன் சந்தை வளாகத்திற்கு அருகிலுள்ள சாலையில் தனது காரை ஓட்டிச் சென்றபோது வந்த சிஐடி அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சுரேஷ் சாலே சிஐடி தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை இப்போது விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019 ஏப்ரல் 21 அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்தபோது, மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சேனல் 4 நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அப்போதைய அரச புலனாய்வுத் தலைவர் மூத்த டி.ஐ.ஜி. நிலந்த ஜயவர்தன அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 2024 ஆம் ஆண்டு சுரேஷ் சாலே அரச புலனாய்வுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த விசாரணை மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்பதால், தொடர்புடைய தகவல்களை வெளியிட முடியாது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தாக சிங்கள ஊகடம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
