இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!! மேத்யூஸுக்கு சர்மா வாழ்த்து

இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை!! மேத்யூஸுக்கு சர்மா வாழ்த்து

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று (17) ஆரம்பமாகின்றது.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

இன்று (17) காலை 10.00 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும், இந்தப் போட்டிக்காக பெயரிடப்பட்ட இலங்கை அணியில் சோனல் தினுஷா, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, பசிந்து சூரியபண்டார மற்றும் இசிதா விஜேசுந்தர போன்ற புதுமுக வீரர்கள் உள்ளனர்.

2025 – 2027 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பின் கீழ் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்நிலையில், இரு அணிகளின் தலைவர்களும் நேற்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட பங்களாதேஷ் அணியின் தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கு தனது அணியின் வீரர்கள் காலி மைதானத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கை அணியின் தலைவர் தனஞ்சய டி சில்வா, தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு வெற்றிகரமான பிரியாவிடையை வழங்க ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறினார்.

இதற்கிடையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ள ஏஞ்சலோ மேத்யூஸுக்கு இந்திய ஒருநாள் அணியின் தலைவர் ரோஹித் சர்மா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சர்மா மேத்யூஸை வாழ்த்தும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 

Share This