இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இஸ்ரேலின் வடக்கு மற்றும் மத்திய நகர்ப்புறங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பல இடம்பெற்றுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்களைச் அண்மித்த பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதையடுத்து மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமடையலாம் என இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இந்த தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி இரவு TABA எல்லை வழியாக இலங்கைக்குப் புறப்படுவதற்காக எகிப்திற்குள் நுழைந்த நான்கு இலங்கையர்களில், செல்லுபடியாகும் இஸ்ரேல் விசா இல்லாதவர்கள் சில மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
பின்னர், எகிப்தில் உள்ள இலங்கைத் தூதுவர் சிசிர செனவிரத்ன மற்றும் அவரது குழுவினர், எகிப்தின் பாதுகாப்பு மற்றும் எல்லைக் குழுக்களுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் அவர்கள் நேற்று காலை கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்ததாக நிமல் பண்டார தெரிவித்தார்.
அவர்கள் இன்று காலை கெய்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கைக்குப் புறப்படவிருந்ததாக கூறினார்.
மேலும், நேற்றைய தினம் இலங்கைக்கு மூவர் வந்துள்ளதுடன், அவர்களுக்கு தேவையான ஆவணங்களைத் தூதரகம் தயார் செய்து வழங்கியதாகவும், அவர்களும் TABA எல்லை வழியாக கெய்ரோ விமான நிலையத்திற்கு சென்று இலங்கைக்கு வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையர்களின் விசா காலத்தை நீட்டிக்க தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைத் தூதரகம் வழங்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்திய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, இந்தியப் பிரஜைகளை தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, ஜோர்தானின் அம்மான் நகரிலிருந்து புதுடில்லி விமான நிலையம் வரை அவ்வப்போது விமானங்களை இயக்கியுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதுவர் தெரிவித்ததாகவும், இந்த விமானப் பாதையைப் பயன்படுத்தி அம்மான் மற்றும் புது டில்லி விமான நிலையங்கள் வழியாக இலங்கைக்கு புறப்பட விரும்புவோர் தூதரகத்திற்கு வருகைத்தந்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.