ரணில் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்கட்சி கண்டனம் – ஜனநாயக விரோதத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும்
கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை திட்டமிட்ட அரசியல் சதி என ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்க ஆதரவு சமூக ஊடகக் கணக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட இந்த கைது, சட்டத்தின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்துவதாகவும் ஒரு கட்சி அரசை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை அம்பலப்படுத்துவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
Clean SriLanka திட்டம் போன்ற அரசாங்கத்தின் சில தி்ட்டங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.
பொது சேவை தொழிற்சங்கங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஒரு சர்வாதிகார அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன என்றும் அந்த கட்சி எச்சரித்துள்ளது.
மேலும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் ஒன்றுபட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையில் ஒரு கட்சி மேலாதிக்கம் எழுவதைத் தடுக்க கூட்டு நடவடிக்கை மிக முக்கியமானது என்பதையும் அந்த கட்சி வலியுறுத்தியுள்ளது.