மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயமடைந்து தற்போது பலபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் மீட்டியாகொட, மானம்பிட்ட பகுதியைச் சேர்ந்த சரத் சமிந்த உதய குமார என்ற 47 வயதுடைய நபர் ஆவார்.
காயமடைந்த நபர் 52 வயதான மஹதுர நளின் வசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு காயமடைந்த மஹதுர நளின் வசந்த மற்றும் அம்பலாங்கொட பிரதேச சபைக்கு சுயேச்சை அணியில் போட்டியிடும் மஹதுர இசுரு டில்ஷான் ஆகியோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மஹதுர நளின், 2015 ஆம் ஆண்டு தனிப்பட்ட தகராறில் நடந்த இரட்டைக் கொலையில் சந்தேக நபர் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடந்த உணவகத்தின் உரிமையாளரும் அம்பலாங்கொடை பிரதேச சபைக்கு சம்பந்தப்பட்ட சுயேச்சைக் குழுவிலிருந்து போட்டியிடும் வேட்பாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் T-56 துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த துப்பாக்கிச் சூடு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டதா என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் குறித்து மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.