செம்மணி – சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் மீட்பு

செம்மணி – சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் மீட்பு

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இரண்டு உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

குறித்த அகழ்வு பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பமான நிலையில் குறித்த பகுதியில் மேலும் ஐந்து மனித உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மூன்று மனித மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால் மனிதப் புதைகுழி என அதனை பிரகடனப்படுத்த முடியும் என்ற நிபந்தனைக்கமைய குறித்த பகுதியை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரி யாழ்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் விண்ணப்பத்தை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This