சமாதான உடன்படிக்கைக்கு ருவண்டா – கொங்கோ இணக்கம்

ஆபிரிக்க கண்ட நாடுகளான ருவண்டாவும் கொங்கோவும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான ஒப்பந்தத்திற்கும் இரு தரப்பினர் உடன்பட்டுள்ளனர்.
இதற்கமைய ருவண்டாவும் கொங்கோவும் எதிர்வரும் வாரம் அமைதி ஒப்பந்தத்தில் முறையாக கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் மோதல்களைத் தடுக்கவென கூட்டுப் பாதுகாப்பு பொறிமுறைக்கான ஏற்பாடுகளும் இந்த உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளதும் அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான ஒப்பந்தத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளின் மத்தியஸ்தராக அமெரிக்காவும் கட்டாரும் செயற்பட்டமை தெரிந்ததே. இந்த இணக்கப்பாட்டுக்கு அமைய கிழக்கு கொங்கோவில் போராடும் ஆயுதக்குழுக்களின் ஆயுதங்கள் குறைக்கப்படவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளன.
இவ்வாண்டின் ஆரம்பப்பகுதியில் கிழக்கு கொங்கோவின் பெரும்பகுதியை ருவண்டா ஆதரிக்கும் எம் 23 ஆயுதக்குழு கைப்பற்றியது. அந்தக் குழுவுக்கு தாம் ஆதரவு நல்குவதாகத் தெரிவிக்கப்படுவதை ருவண்டா மறுத்துள்ளது.