
இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
விநியோக சங்கிலி தொடர்பான பிரச்சினைகள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
80 சதவீதமான உருளைக்கிழங்கு, 80 சதவீதமான வெங்காயம், 100 சதவீதமான பருப்பு, 90 சதவீதமான சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது.
இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்தும் பெருந்தொகைப் பொருட்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த விநியோக வழிகளில் இருக்கும் நிலைமை சகல நாடுகளுக்கும் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
கப்பல் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதனால், விலை மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே, இந்தப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும். எரிபொருள் விலை அதிகரித்ததைப்போன்று ஏனைய சிறு சிறு பொருட்களுக்கும் விலைகளில் சிறியளவான மாற்றம் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நியாயமற்ற விலை உயர்வைத் தடுக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
