இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியவர்களுக்கு விளக்கமறியல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை நவம்பர் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும் அந்த திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
பூசா சிறையில் உள்ள துப்பாக்கிச் சூடு நடத்திய நபரையும், மற்ற சந்தேக நபர்களையும் ஜூம் தொழில்நுட்பம் மூலம் அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
