
பிரித்தானியாவில் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு
பிரித்தானியாவில் கடவுச்சீட்டு விண்ணப்ப கட்டணங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.
கட்டணங்கள் எட்டு வீதம் அதிகரிப்பதால், கடவுச்சீட்டு கட்டணங்கள் முதல் முறையாக 100 பவுண்ட்ஸை தாண்டும் என்று உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி, ஐக்கிய இராச்சியத்திற்குள் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களுக்கான கட்டணம் 94.50 பவுண்ட்ஸில் இருந்து 102 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்படவுள்ளது.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம் , தற்போதைய 61.50 பவுண்ட்ஸில் £66.50 பவுண்ட்ஸாக அதிகரிக்கப்படவுள்ளது.
தபால் மூலமான விண்ணப்பங்களுக்கும், வெளிநாடுகளில் இருந்து சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கும் இதே போன்ற சதவீத அதிகரிப்புகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும் இந்த மாற்றங்கள், நாளை எட்டாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
