அதிக விலைக்கு விற்பனை – துறைமுக நகரத்தில் அமைந்துள்ள கடைக்கு பெருந்தொகை அபராதம்

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள ஒரு தனியார் விற்பனை நிறுவனம் அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக ஐந்து லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விற்பனை நிறுவனம் 70 ரூபா விலை கொண்ட குடிநீர் போத்தலை 200 ரூபாவிற்கு விற்பகை செய்துள்ளது. இது குறித்து வழங்கு விசாரணைகள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது நிறுவனத்தினர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள் ஜூலை 16 அன்று சம்பந்தப்பட்ட விற்பனை நிலையத்தை ஆய்வு செய்தபோது, 70 ரூபா விலை கொண்ட 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலை 200 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளது.
2025.04.01 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி உத்தரவின்படி, 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(4A) ஆகியவற்றின் கீழ் 200 ரூபாவிற்கு விற்பனை செய்வது குற்றமாகும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.