சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விடைகொடுத்தார் நிக்கோலஸ் பூரன்

மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரரும், உலகின் முன்னணி டி20 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதில் சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடிய அவர், தற்போது நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள்மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை.
பூரன் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இதுவரையில் 167 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்நிலையிலேயே அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். நேற்று திங்கட்கிழமை அவர் தனது முடிவை அணி நிர்வாகத்திடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவரது சாதனைகளுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம், மேலும் அவர் பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ரசிகர்களுக்கு வழங்கிய தருணங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்று கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் தெரிவித்துள்ளது.
“அவரது பயணத்தின் அடுத்த கட்டத்தில் அவருக்கு நல்வாழ்த்துக்கள்.” என்றும் கிரிக்கெட் மேற்கிந்திய தீவுகள் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அவர் கடைசியாக 2024 டிசம்பரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடினார்.
எனினும், ஜூலை 2023 முதல் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை, டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவில்லை.
மேலும், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையையும் நிக்கோலஸ் பூரன் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.