
புதிய கோவிட் திரிபு – உஷார் நிலையில் இலங்கை
பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சர்வதேச சுகாதார அறிக்கைகளின்படி, சிகாடா என அறியப்படும் இந்த மாறுபாடு, 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
பின்னர் குறைந்தது 23 நாடுகளில் இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் பரவி வரும் புதிய வகை நோய்த்தொற்றுகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருப்பதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமீபத்தில் புதிய வகை தொற்றோ அல்லது வேறு எந்த வகை தொற்றோ பதிவாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், வழக்கமான பொது சுகாதாரக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக பாதுகாப்பு முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
