வன்னியில் தமிழர்களின் காணியை அபகரிக்க முயன்ற கடற்படையினர் பின்வாங்கினர்

வன்னியில் தமிழர்களின் காணியை அபகரிக்க முயன்ற கடற்படையினர் பின்வாங்கினர்

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் 16 வருடங்களுக்கு மேலாக கடற்படையினர் வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியின் உரிமையை உத்தியோகபூர்வமாக கையகப்படுத்த கடற்படை மேற்கொண்ட முயற்சி, காணி உரிமையாளர்களின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிலாவத்தை கிராமத்தில் நான்கு உள்ளூர்வாசிகளுக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் தனியார் காணியை கையகப்படுத்தி கடற்படை துணைப்பிரிவு ஒரு தளத்தை நிறுவியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

“சிலாவத்தை கிராம அலுவலகர் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இலங்கை கடற்படைத்தளம் அமைந்திருக்கும் காணியானது காணி கையகப்படுத்தல் சட்டத்தின் அத்தியாயம் 460இன் 5ஆவது பிரிவின் கீழ் நிலஅளவை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நில அளவையாளர் கி.கிருஸ்ணராசா அவர்கள் அறிவித்துள்ளார்.” என ஜூன் 9 ஆம் திகதி காணி உரிமையை கோருபவர்களுக்கு அறிவித்த கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் அன்றைய தினம் வந்து காணி தொடர்பான தகவல்களை வழங்குமாறும் அறிவித்திருந்தார்.

அரச நில அளவையாளர்கள் நில அளவைக்காக வந்தபோது, காணிக்கு உரிமை கோரும் மக்கள் நில அளவையாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் நிலத்தை தங்களிடம் திருப்பித் தருமாறு கோரி ஒரு கடிதத்தை கையளித்தனர்.

“இந்த இடத்தை விட்டால் நாங்கள் ஏதோ செய்துகொள்வோம். நீங்கள் சொல்வது போல் நாங்கள் ஆவணங்களை தயார்படுத்துகிறோம். இந்த காணிக்கு மாத்திரமல்ல இங்குள்ள ஏனைய காணிகளுக்கும் ஒப்பனையோ, அனுமதிப் பத்திரங்களோ இல்லாமல்தான் இருக்கிறது. வீட்டுத்திட்டம் கொடுக்கப்பட்ட காணிகளுக்கும் ஆவணங்கள் இல்லை. மீன்பிடிக்கு இந்த இடம் முக்கியமானது.” என காணி உரிமையாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

காணி உரிமையை கோருபவர்கள் 1980 முதல் இந்த காணியில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும், 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரழிவு காரணமாக அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது எனவும் கூறுகிறார்கள்.

போர் முடிவடைந்த பின்னர் 2009 ஆம் ஆண்டு தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பியபோது, தங்கள் காணி கடற்படையால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் சுனாமி பேரழிவில் தமது காணிகளின் உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களும் அழிவடைந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் தங்கள் மூதாதையர் காணியை கடற்படை கையகப்படுத்தியது குறித்து கிராம அலுவலர், பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோருக்குத் தெரிவித்ததாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.

வடக்கில் சுமார் 6,000 ஏக்கர் காணியை கையகப்படுத்தும் அரசின் முயற்சி, மே மாத இறுதியில் தமிழ் அரசியல்வாதிகள் ‘போரும் சுனாமியும்’ உண்மையான உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வ உரிமையை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லாமைக்கு காரணமா அமைந்தன என நம்ப வைத்ததை அடுத்து முறியடிக்கப்பட்டது.

ஜூன் 17, 2025 அன்று காணியை அளவிட வந்த அரச நில அளவையாளர் காணி உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பை அடுத்து திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர் மேலும் தெரிவிக்கின்றனர்.

Share This