எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே என் தந்தை திரும்பிவிட்டார் – நாமல் எம்.பி உருக்கம்

தனது தந்தை மகிந்த ராஜபக்ச ஆரம்பித்த இடத்திற்கே மீளவும் திரும்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேறியதாக தெரிவித்துள்ள நாமல் எம்.பி, தனது சொந்த ஊரான தங்காலைக்குத் திரும்பியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து செய்யப்படும் சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பு விஜேராம இல்லத்தில் இருந்து மகிந்த ராஜபக்ச இன்று வெளியேறியிருந்தார்.
இது குறித்து நாமல் ராஜபக்ச எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“இன்று, என் தந்தை கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறி தங்காலைக்குத் திரும்புகிறார், இது அனைத்தும் தொடங்கிய இடம்.
உண்மையான பலம் நமது வேர்களிலிருந்து வருகிறது, பதவிகள் அல்லது சலுகைகளிலிருந்து அல்ல என்பதை நினைவூட்டுகிறது.” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.