
யாழில் மாட்டு இறைச்சியை நூதனமாக கொண்டுச் சென்றவர் கைது!
சட்டவிதோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (31) அதிகாலை வேலணை அராலிச் சந்தியில் இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து மேலும் தெரிதவருகையில் –
இன்று அதிகாலை 5.30 மணியளவில் புங்குடுதீவு பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்ட 35 கிலோ மாட்டு இறைச்சியுடன் மோட்டார் சைக்கிளில் மீன் வியாபாரி என்ற போர்வையில் வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளியைச் சேர்ந்த குறித்த நபர் ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிசார் அணியினர் அப்பகுதியில் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கை ஒன்றின் போது சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை முன்னெடுக்கப்பட வேளை கைது செய்யப்படுள்ளார்.
இதன்போது மீன் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட தலா ஒரு கிலோ நிறைகொண்ட 35 இறைச்சிப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் குறித்த நபர் கைது செய்யப்படதுடன் மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னர் இன்று குறித்த நபர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை வேலணை பிரதேச ஆளுகைக்குள் சட்டவிரோதமான முறையில் மாடுகள் களவாடப்படுவதும் இறைச்சியாக்கப்பட்டு யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படுவதாகவும், இதில் பெறுமதி மிக்க வளர்ப்பு மாடுகளும் சூறையாடப்படுவதாகவும் இவ்விடையத்தை கட்டுப்படுத்துவதில் ஊர்காவற்றுறை பொலிசார் அக்கறை கொள்வதில்லை என பிரதேச மக்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த நிலையில் இன்று குறித்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
