
மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல – நாமல் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் இரத்தவெறி கொண்ட ஆட்சியாளர் அல்ல என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது சரத் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சரத் பொன்சேகா பல்வேறு சந்தர்ப்பங்களில் முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச வெள்ளைக் கொடி ஏந்திய ஒரு குழுவைச் சுட உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா கூறியதாகவும், ஆனால் அவர்கள் தப்பிப்பதற்கான வழியையும் தயார் செய்ததாகவும் கூறுவது நகைப்புக்குரியது என்றும் கூறினார்.
மேலும், தனது தந்தை இந்த நாட்டின் தமிழ் மக்களுடன் போராடவில்லை, மாறாக விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துடன் போராடினார் என்பதை தெளிவாகக் கூற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
புலம்பெயர் சமூகத்தினரும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கூறும் இரத்தவெறி பிடித்த குணம் மகிந்த ராஜபக்சவிடம் இல்லை என்றும், இன்று நாட்டில் அனைவரும் அனுபவிக்கும் சுதந்திரம் மகிந்த ராஜபக்சவும் போர்வீரர்களும் இணைந்து வென்றது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதன்படி, இன்று பல்வேறு வழிகளில் போராடுபவர்கள் கூட அந்த சுதந்திரத்தில் வாழ்கிறார்கள் என்று நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
