
சட்டத்தரணி தம்பதி படுகொலை: துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய சகோதரர்கள் கைது
தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், கொட்டாவை பகுதியில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்துள்ளனர்.
இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளான “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகியோரின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது
கைது செய்யப்பட்ட நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகிய இருவரும், வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவின் பேரில் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
கொட்டிகாவத்தையில் வைத்து ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, அதனைத் துப்பாக்கிதாரிகள் வந்த காருக்கு மாற்றியுள்ளனர்.
மேலும், சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்து வரும் நேரத்தை ஒரு வார காலமாக இவர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று சூப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டிருந்த தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்
இந்தக் கொடூரக் கொலைக்கு உதவியமைக்காக இந்தச் சகோதரர்களுக்குப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும், அதற்குப் பதிலாக அவர்களுக்கு “ஐஸ்” போதைப்பொருள் வழங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
துப்பாக்கிதாரிகளுக்குத் தேவையான தங்குமிட வசதிகள் மற்றும் போதைப்பொருட்களை பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்தச் சகோதரர்களே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.
வாடகைக்கு எடுத்த காரை மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர்
இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியின் இறுதிக்கிரியைகள், நேற்று (16) பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் இடம்பெற்றன.
இதில் பெருந்திரளான சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இக்கொலையுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
