நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

நேபாளத்தில் இஷார செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த யாழ் தமிழர்கள்!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இஷார செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, நேபாளத்தில் இஷார செவ்வந்தி உள்ளிட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த யாழ்ப்பாணத்தை ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி நடந்த கொலை தொடர்பாக நீதிமன்றத்தால் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியை இலங்கை பொலிஸின் சிறப்பு குழு கைது செய்துள்ளது.

இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் முக்கிய சந்தேக நபரும் மேலும் பல சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேக நபரான இஷார செவ்வந்தியை கைது செய்வதற்காக சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசாரணை மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாகவும், பல நீண்ட இரகசிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுத் துறை (CID), சிறப்புப் புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் வெளிநாடுகளின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, நேபாள அரசாங்கத்தின் ஆதரவுடன், களத்தில் கிடைத்த தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை தகவல்களைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸ் குழு சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்தது.

சந்தேக நபரான இஷார செவ்வந்தி, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் பல்வேறு கொலைகளைத் திட்டமிட்ட ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கெஹல்பத்தர பத்மேவிடம் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இஷார செவ்வந்தி நேபாளத்தில் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல உள்ளிட்ட பொலிஸ் குழு நேபாளம் சென்றிருந்தது.

உள்ளூர் பொலிஸாரின் உதவியுடன், இஷார செவ்வந்தி மற்றும் அவரது குழுவினர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தனர்.

நேபாளத்தில், இஷார செவ்வந்தியுடன் மற்றொரு தமிழ் ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரையும் தவிர, சந்தேக நபர் மற்றும் தங்குமிடம் வழங்கிய சந்தேக நபர் உட்பட மேலும் நான்கு பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நான்கு பேரில் மூன்று பேர் ஆண்கள், ஒருவர் பெண் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு பெண் சந்தேக நபர்கள் மற்றும் நான்கு ஆண் சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆகும்.

இஷார செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றையப் பெண் இஷார செவ்வந்தியை ஒத்த தோற்றமுடையவராக இருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னைப் போல் தோற்றமுடைய பெண்ணை பயன்படுத்தி இஷார செவ்வந்தி நேபாளத்தில் இருந்து வேறு நாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட பின்னர் இஷார செவ்வந்தி நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

மித்தெனி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்திருந்த அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.

கெஹல்பத்தர பத்மேவி ஆலோசனையின் பேரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்த நபர் உதவிகள் அனைத்தையும் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மூன்று வாரங்கள் தங்கியிருந்த இஷார செவ்வந்தி அங்கிருந்து நேபாளத்திற்கு தப்பிச் செற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்திற்கு தப்பிச் செல்வதற்கும் கெஹல்பத்தர பத்மே உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில். வெளிநாடுகளில் உள்ள இந்த சந்தேக நபர்கள் தொடர்பாக இராஜதந்திர மட்டத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவதில், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ஆனந்த விஜயபால, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் ரவி செனவிரத் ஆகியோரின் சிறப்பு பங்களிப்பும் கிடைத்திருந்தன.

கைது செய்யப்பட்ட அனைவரும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

பல்வேறு நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் உடன்படிக்கை மூலம் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ் அவர்களை விரைவாக இலங்கைக்கு அழைத்து வர முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share This