இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் – இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல்

இந்திய புலனாய்வு அமைப்பு வழங்கிய தகவல் – இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல்

யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல எனவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் குழு கைது செய்யப்பட்டது குறித்தும் அமைச்சர் இதன்போது தெளிவுப்படுத்தியிருந்தார்.

இதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இந்தோனேசிய பொலிஸார் நடத்திய ஏழு நாள் கூட்டு நடவடிக்கையின் விளைவாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய புலனாய்வு அமைப்புகளின் ஆதரவும் இந்த நடவடிக்கைக்கு கிடைத்தாக அமைச்சர் தெளிவுப்படுத்தியிருந்தார்.

பல சந்தர்ப்பங்களில், நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தால் வளர்ந்துள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தங்கள் இருப்பு மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வளர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதையெல்லாம் நிறுத்திவிட்டதாகவும், தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை உருவாக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவுகளை உன்னிப்பாக விசாரித்து வருவதாகவும் அமைச்சர் வெளிப்படுத்தியிருந்தார்.

அத்தகைய நபர்களின் சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஒரு அரசாங்கமாக நாட்டிற்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதுடன், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதும், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற செய்தியை சமூகத்திற்கு வழங்குவது ஆகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )