பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கையின் கண்டனம் மற்றும் அனுதாபத்திற்கு ஜெய்சங்கர் பாராட்டு

ஜனநாயகத்திற்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (PRIDE) நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக
புதுடில்லிக்கு சென்ற இலங்கை நாடாளுமன்றக் குழுவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் குறித்து இலங்கைக் குழு கண்டனம் தெரிவித்ததற்கும், அனுதாபம் தெரிவித்ததற்கும் அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டியுள்ளார்.
“வலுவான மக்கள்-மக்கள் உறவுகளால் ஆதரிக்கப்படும் நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையைப் பற்றி விவாதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 24 இலங்கை பங்கேற்பாளர்கள் கொண்ட குழு, கடந்த வாரம் புது டில்லியில் நடைபெறும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டது.
துணை சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலிஹ் தலைமையிலான குழுவில் பல்வேறு அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் நாயகம் உட்பட இலங்கை நாடாளுமன்றத்தின் 4 அதிகாரிகள் உள்ளடங்குவர்.
நேற்று (26) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற மற்றும் வரவு செலவுத் திட்ட செயல்முறைகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது, நாடாளுமன்றக் குழுக்களின் அமைப்பு மற்றும் இரு ஜனநாயக நாடுகளுக்கும் இடையிலான பிற தொடர்புடைய வி்டயங்கள் ஆகியவை அடங்கும்.