மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்

மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இதில் இதுவரை 10 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன.

அதன் முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

‘பி’ பிரிவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-ஓமன் அணிகள் மோதுகின்றன.

இதனையடுத்து சூப்பர்4 சுற்று 20-ம் திகதி தொடங்குகிறது. சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இருந்து தகுதி பெற்ற 2 அணிகள் மோதுகின்றன. அதனையடுத்து 21-ம் திகதி நடைபெறும் 2-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ள 2 அணிகள் மோதுகின்றன.

அதன்படி 21-ம் திகதி நடைபெற உள்ள சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன் இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், சூப்பர்4 சுற்றில் வெற்றி அடையப் போவது யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Share This