உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை திருடிய வைத்தியசாலை ஊழியர்

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் உடலில் இருந்து தங்க நகைகளை வைத்தியசாலை ஊழியர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து நகைகளை அந்த நபர் திருடுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரப்பப்பட்டதைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான இளம் பெண் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரின் உடல் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து பொலிஸார் உடலைப் பரிசோதித்து, பின்னர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்தப் பரிசோதனையின் போது, அந்தப் பெண்ணின் உடலில் இருந்து காதணிகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.
பொலிஸார் காதணிகளைத் திருடிவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, வைத்தியசாலை ஊழியர் ஒருவர் காதணிகளில் ஒன்றை பொலிஸாரிடம் கொடுத்து, தரையில் அதைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.
எவ்வாறாயினும், பொலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குறித்த வைத்தியசாலை ஊழியரே காதணிகளைத் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நகைகளைத் திருடும் சிசிடிவி காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன.
அந்தப் பெண்ணின் கணவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், வைத்தியசாலையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் வைத்தியர் கிஷோர் அஹுஜா, பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
यूपी : शामली के जिला अस्पताल में वार्ड बॉय ने महिला की लाश से कुंडल चुरा लिए। रोड एक्सीडेंट में महिला की मौत हुई थी। CCTV देखिए।@riyaz_shanu pic.twitter.com/9ioH5JDUXe
— Sachin Gupta (@SachinGuptaUP) April 20, 2025