கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்தருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.
உடனடியாக இன்னொரு படகு மூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.