
டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 9,480 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 51.3 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
