லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் செலுத்த வேண்டும்: நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாயை வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாவை கடனாக பெற்றிருந்தார்.
இந்த கடன் தொகையை அவருக்காக லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இதையொட்டி நடிகர் விஷாலும், லைகா நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
அதாவது, கடன் தொகை முழுவதையும் திருப்பிச்செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.
எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிட்டதாக கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா சார்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதன்படி, லைகா நிறுவனத்திற்கு 21 கோடி ரூபாவை வட்டியுடன் விஷால் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
இதன்படி, 21 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.